சென்னை: வீட்டு இணைப்புகளுக்கான மின் கட்டண உயர்வு இருக்காது என்றும், அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்றும் போக்குவரத்து மற்றும் மின்சார அமைச்சர் சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தனது அறிக்கையில், சமூக ஊடகங்களிலும் சில செய்தி ஊடகங்களிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், வீட்டு இணைப்புகளுக்கான மின் கட்டண உயர்வு இருக்காது என்று 20.05.2025 அன்று விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
இருப்பினும், மின் கட்டணம் குறித்த வதந்திகள் மீண்டும் பரவி வருவதால், அரசு இதை மீண்டும் தெளிவுபடுத்தி வருகிறது. தற்போது, மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மின்சாரக் கட்டணம் தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம் ஏதேனும் உத்தரவை பிறப்பித்தாலும், வீட்டு மின்சார நுகர்வோர் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மின் கட்டண உயர்வு இருக்காது, போக்குவரத்து மற்றும் மின்சார அமைச்சர் சிவசங்கர் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய 100 யூனிட் இலவச மின்சாரம் உட்பட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும். எனவே, மின் கட்டண உயர்வு தொடர்பான தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.