ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னார் முதல் இந்திய கடல் எல்லை வரையிலான மணல் திட்டுகளுக்கு சுற்றுலா படகு சேவையை தொடங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி முதல் இலங்கை தலைமன்னார் வரையிலான கடல் பகுதியில் 13 மணல் திட்டுகள் உள்ளன. இதில் 6 தீடைகள் இந்திய பகுதியிலும், 7 தீடைகள் இலங்கை கடல் பகுதியிலும் உள்ளன.
இந்நிலையில், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், நாட்டின் கடல் எல்லைக்குள் உள்ள மணல் திட்டுகளுக்கு படகு சேவையை தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கனகேஸ்வரன் தலைமை வகித்தார். இதில் இலங்கை கடற்படை அதிகாரிகள், சுற்றுலாத்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில், தலைமன்னார் முதல், இரண்டாவது, ஐந்தாம், ஆறாவது மணல் தீடையில் படகு சவாரி நடத்த முடிவு செய்யப்பட்டது. மூன்றாவது மணல் தீடை இலங்கை கடற்படை முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாலும், நான்காவது தீடையில் பறவைகள் அதிகளவில் தங்கியுள்ளதாலும், ஏழாவது தீடை சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் உள்ளதாலும், இந்த மூன்று தீடையில் சுற்றுலா படகு சவாரி நடத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.