கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மின்விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், மின்வாரியம் பொதுமக்களுக்கு முக்கியமான பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. பருவமழைக்காலத்தில் வீட்டின் மின்சாதனங்களில் கசிவுகள் உள்ளதா என்பதை சோதனை செய்ய வேண்டும். பழுதடைந்த சுவிட்சுகள் மற்றும் மின்சாதனங்களை உடனே மாற்றுவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய அதிகாரியின் செய்திக்குறிப்பில், காற்றுடன் கூடிய மழையால் மின்கம்பிகள் அருகில் செல்லவேண்டாம் என்றும், அவற்றை தொடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் மின்கசிவு தடுப்பு கருவியான இ.எல்.சி.பி. மற்றும் இ.சி.டி. ஆகியவை கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும். மின்சாரம் பூமியில் செல்வதற்கான எர்த் வயர்கள் துண்டிக்கப்படாமல் பராமரிக்கப்பட வேண்டும்.
ஈரமான கையால் மின்சார உபகரணங்களை தொடவேண்டாம். இடி மற்றும் மின்னல் நிகழும் நேரத்தில் தொலைக்காட்சி, கணினி, தொலைபேசி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். மின்சாதனத்தில் தீ ஏற்பட்டால் தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். அவ்வாறான சூழ்நிலைகளில், முதலில் மெயின் ஸ்விட்சை அணைத்து மின்சாரத்தை துண்டித்து, தீயணைப்பு துறையின் உதவியை நாட வேண்டும்.
மின்கம்பிகளில் மரக்கிளைகள் அல்லது வேறு பொருட்கள் தொங்கிக் கொண்டிருப்பதை பொதுமக்கள் அகற்ற முயற்சிக்கக் கூடாது. மின் வாரியத்துக்கு உடனடியாக தகவல் வழங்க வேண்டும். மழையால் நீர் தேங்கி இருக்கும் சாலைகளில் நடக்கும்போது மிகுந்த கவனம் அவசியம். வெளியிலோ, மரத்தின் அடியிலோ நிற்காமல், கான்கிரீட் கட்டிடங்களில் தஞ்சம் அடைய வேண்டும்.
மின்னழுத்தக் கோபுரங்களில் கால்நடைகளை கட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். அதேபோல், கொடிகள் கட்டுவது, துணிகள் காய போடுவது போன்ற செயல்களும் செய்யக்கூடாது. திருவிழாக்கள் மற்றும் திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளில் அலங்கார விளக்குகளை மின்கம்பிகளில் கட்டுவது அபாயகரமானது. இவை உயிரழுத்து கம்பிகளாக இருந்தால் விபத்துக்கே வழிவகுக்கும்.
இத்தகவல்களை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மின் சம்பந்தமான புகார்களை உடனடியாக தெரிவிக்க மின்வாரிய அலுவலகத்தை அணுகலாம் அல்லது 9498794987 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். மழைக்காலத்தில் மின்சார பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவே வழங்கப்படுகின்றன. அந்த அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் பல்வேறு உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்களை தடுக்கும் வழி கிடைக்கும்.