சென்னை: சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்களுக்கு சுயவேலை வாய்ப்புகளை உருவாக்கவும் சமூக நலத்துறை மூலம் அரசு மானியத்துடன் ‘பிங்க்’ ஆட்டோக்களை இயக்கும் திட்டம் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு மானியமாக ஒரு ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். அதன்படி, ஓட்டுநர் உரிமம் பெற்று சென்னையில் வசிக்கும் 25 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் இத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதன்படி, இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்திற்கு, டிச., 10-ம் தேதி வரை, 300-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், தேர்வு செய்யப்பட்ட, தகுதியான, 250 பேருக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம், பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக அண்ணாநகர் வட்டார போக்குவரத்து கழக பயிற்சி வளாகத்தில் பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் ஆட்டோக்களை பாதுகாப்பாக இயக்குதல், தற்காப்பு, டிஜிட்டல் முறையில் பணம் பெறுதல், தனியார் ஆட்டோ ஆப்ஸ் பயன்படுத்துதல், ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் அவசர காலங்களில் போலீசாரை தொடர்பு கொள்வது குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இதுவரை 114 பெண் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மீதமுள்ள பெண் ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் பிங்க் ஆட்டோக்களை இயக்கும் திட்டம் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.