கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. டேனியல் ஆரோக்கியம் என்பவருக்குச் சொந்தமான படகுடன் நடுக்கடலில் 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் ஒரு படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்கிறது. தமிழ்நாட்டின் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். இவ்வாறு மீன்பிடிக்கும் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. இலங்கை கடற்படை பெரும்பாலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால், ஆளும் கட்சி உட்பட தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசிடம் நிரந்தர தீர்வு காணக் கோரி வருகின்றன.

இருப்பினும், எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 8 மீனவர்களையும் அவர்களது படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இது தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், இலங்கை கடற்படை தற்போது மீண்டும் 7 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் நேற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். இந்த நிலையில், அவர்கள் 7 பேரையும் எல்லை தாண்டிச் சென்றதாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்து, அவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்தது. அவர்கள் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.