ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை பகுதிகளில் நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதையடுத்து, ஒரு மோட்டார் படகு மற்றும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது எல்லை தாண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இலங்கை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 49 பேர் 5 மோட்டார் படகுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், மண்டபம் மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.