சென்னை: திருவொற்றியூரில் ரூ.272 கோடியில் அமைக்கப்பட்ட புதிய சூரை மீன்பிடித் துறைமுகம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

முக்கியமாக, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விடுதலைக்காக, பிரதமர் மோடியுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இதுவரை 76 கடிதங்கள் எழுதியுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக இதுவரை 1,154 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், தற்போது எஞ்சியுள்ள 23 மீனவர்களின் மீட்புக்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் கூறினார்.
காசிமேடு துறைமுகத்தில் நெரிசல் அதிகரித்ததால், சூரை வகை மீன்களை பிடிக்க பிரத்யேகமாக இந்த துறைமுகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது விசைப்படகு மீனவர்களுக்கு பெரும் பலனளிக்கும் என்றும் அவர் விளக்கினார். இந்நிகழ்வில் ரூ.242 கோடியில் 2,000 மீனவர்களுக்கு நுண்கடன் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், ராமநாதபுரம் மற்றும் ரோச்மா நகர் பகுதிகளில் மீன் இறங்கு தளங்களுக்கு அடிக்கல் நாட்டும் பணியும் நடைபெற்றது.
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.5,000-இல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தியதோடு, அரசு மீன் பண்ணைகளை மேம்படுத்த ரூ.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 1.2 லட்சம் மீனவர்களுக்கு ரூ.1,528 கோடி கடனுதவியையும் வழங்கியுள்ளோம் என முதல்வர் கூறினார்.
மீனவர்களின் மீட்பு என்பது அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பால் செல்ல வேண்டிய ஒன்றாகும். இது மக்களின் உரிமையை பாதுகாப்பது எனவும், தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமையை தொடர்ந்து நிலைநாட்ட அரசு பணியாற்றி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையால் தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதற்கான தீர்வு கச்சத்தீவை மீட்பதே எனவும் முதல்வர் தெரிவித்தார். இதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் எனக் கூறினார்.