சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு, 30 ஆண்டுகள் தண்டனைக்குறையாமல் ஆயுள் தண்டனை மற்றும் ₹90,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு, தமிழ்நாடு காவல்துறை பெண்கள் பாதுகாப்பில் காட்டும் செயல்திறனை பிரதிபலிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2023 டிசம்பர் 23ஆம் தேதி மாணவி புகார் அளித்ததும், அடுத்த நாளே ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். வழக்கின் விசாரணை ஐந்து மாதங்களில் முழுமை பெற்றது. 11 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி நிரூபிக்கப்பட்ட நிலையில், நீதிபதி 30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, அரசியல் லாபத்திற்காக பெண்களின் துன்பங்களை பயன்படுத்த முயலும் சிலருக்குக் கொடுக்கப்பட்ட பதிலாகும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கு இனி முன்விடுதலை கிடையாது எனவும், புதிய சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் இந்த வழக்கு நிரூபமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த வழக்கில் காவல்துறை விரைந்து, நியாயமாக செயல்பட்டதையும், நீதிமன்றம் பாராட்டியுள்ளதையும் அவர் நினைவூட்டியுள்ளார். இது, தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு பற்றிய அரசின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.