தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை மாநகரில் பிரம்மாண்ட ரோட் ஷோ மற்றும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதற்காக மதுரையில் திமுகவினர் மிகுந்த ஆடம்பர ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஆனால், பந்தல்குடி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு துணியால் மூடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இதற்கான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிகழ்வை அடையாளப்படுத்தி அதிமுகவின் மருத்துவர் அணி இணை செயலாளர் டாக்டர் சரவணன் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். அவர், “மக்கள் முகம் சுழிக்கும் வகையில் ரோட் ஷோ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வியாபாரக் கடைகளின் முன் தடுப்புகள் அமைத்து, அவை மூடப்பட்டுள்ளன” என கூறினார். மேலும், அப்பாவி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மதுரை மக்கள் தற்போது சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு ஆகியவற்றால் கடுமையாக அவதிப்படுகிறார்கள் எனவும், மக்கள் செலுத்தும் வரிகளை பயன்படுத்து அரசானது, சாலைகளின் நலனில் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். எனினும், ரோட் ஷோ நடைபெறும் சாலைகள் மட்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன என்பது அவர் எச்சரிக்கையாக கூறும் குற்றச்சாட்டாகும்.
முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கத் தவறிய நிலையில், ரோட் ஷோ நடத்துவது பற்றி “ரோம்நகர் பற்றி ஏறியும்போது நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல” இருக்கிறது எனவும் அவர் விமர்சித்தார். 10 ஆண்டுகளாக அம்மா ஆட்சியில் மதுரைக்கு 8000 கோடி மதிப்பில் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வோம்” என்று திமுக தலைமையினரான ஸ்டாலின் மற்றும் உதயநிதி கூறியதையும் நினைவுபடுத்தினார். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதாலும், இதனால் 23 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதாலும், திமுக பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறினார்.
இதற்காக நடைபெறும் திமுக பொதுக்குழுவில், “நாங்கள் மக்களை ஏமாற்றி விட்டோம்; நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறோம்” என தீர்மானம் கொண்டு வரத் தயாரா? என டாக்டர் சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மாநகரில் உள்ள பந்தல்குடி பகுதியில், பல ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி மக்கள் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் நடைபெற்ற சிறுமழை காரணமாக பலமுறை வெள்ளம் ஏற்பட்டு சாலை பாழடைந்தது. இந்நிலையில் ரோட் ஷோ நடைபெறும் பாதையில் கழிவுநீர் கால்வாய் மூடப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் முதல்வரிடம் நேரில் தங்கள் பிரச்சனைகளை கூறலாம் என எதிர்பார்த்திருந்தபோது, அந்த இடத்தில் வண்ண திரைச்சீலையால் கால்வாய் மூடப்பட்டுள்ளது. இது “இருபுற தடுப்பு சுவர் கேட்டால், ஒருபுறம் திரைச்சீலை போடுவது தான் திராவிட மாடல் அரசா?” என்ற கேள்வியை தூக்கியுள்ளது.