சென்னை: நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் கால்நடை மருத்துவத்திற்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதேபோல் ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங்கிற்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2025-26-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 4-ம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நேரடியாக நடைபெறும்.
இந்தத் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கியது. இதற்கான காலக்கெடு மார்ச் 7-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளை முன்கூட்டியே செய்து முடிப்பதன் மூலம், கடைசி நேர இடையூறுகளைத் தவிர்க்கலாம். ஒரு மாணவர் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
நீட் தகுதித் தேர்வு மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும். தேர்வுக்கான ஹால் டிக்கெட் மே 1ம் தேதி வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியிடப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் கட்டணம் குறித்த தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 011- 40759000 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சலையோ தொடர்பு கொண்டு தெளிவுபடுத்தலாம் என NTA வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.