கடந்த 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தமிழக மின்வாரியம் சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம், மாநில அரசு ரூ.7,050 கோடி கூடுதல் கடன் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது.
தமிழக மின்வாரியம் மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின்தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்களாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நிதியாண்டு முடிவடைந்த பிறகு, வரவு-செலவு உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மத்திய மின்சட்டத்தின் வழிகாட்டுதலின்படி இதனை மின்வாரியம் தாக்கல் செய்து வந்தது. கடந்த ஆண்டுகளில் அறிக்கையை தாக்கல் செய்யத் தேவையான காலக்கெடு மீறப்பட்டு தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையில், மின்துறையில் சீர்திருத்தங்களை செயல்படுத்தும் மாநிலங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், கூடுதல் கடன் பெற அனுமதி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு 2021-22-ல் அறிவித்தது. அதன் படி, மாநிலங்கள் தங்களது உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 0.5% வரை கூடுதல் கடன் பெற அனுமதிக்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் மூலம், தமிழகம் ரூ.7,054 கோடி கூடுதலாக கடன் பெற அனுமதி பெற்றுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தும் வகையில், மின்வாரியம் மத்திய மின்சட்டத்திற்கு மாற்றாக, நிறுவனம் சட்டத்தின்படி இந்தியக் கணக்கு தரநிலைகளை பின்பற்றும் வகையில் நிதிநிலை அறிக்கையை தயாரிக்க முடிவு செய்தது. இதில், வரவு-செலவு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முழுமையாக இடம்பெற்றுள்ளன.
நிறுவன சட்ட விதிகளின்படி, எந்த நிறுவனமும் ஒரு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அந்த ஆண்டு முடிந்த 6 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், மேலும் 3 மாதங்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படும்.
இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மின்வாரியம் கடந்த டிசம்பருக்குள் தயாரித்து, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனால், தமிழக அரசு கூடுதலாக ரூ.7,054 கோடி கடன் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.