திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்திற்கு அரசு விழா நடைபெறும் இடத்தில் 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்பேரில், வரும் 6, 7-ம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு நடத்துகிறார். 6-ம் தேதி மதியம் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரும் அவர், திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் சிப்காட்டில் சோலார் தொழிற்சாலையை திறந்து வைக்கிறார்.
பின்னர் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள காந்தி மார்க்கெட்டை திறந்து வைக்கிறார். திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் பாளையங்கோட்டையில் ரூ.40 கோடியில் காந்தி மார்க்கெட்டை திறந்து வைக்கிறார். இந்த சந்தை வளாகத்தில் 50 டன் காய்கறிகள் வரை கெட்டுப்போகாமல் இருக்க குளிர்பதன கிடங்கு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாலையில் திருநெல்வேலி கிழக்கு மற்றும் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகளை சந்திக்கிறார். மறுநாள் 7-ம் தேதி காலை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களை சந்திக்கிறார்.
பின்னர் பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் நடைபெறும் விழாவில் நிறைவடைந்த திட்டப்பணிகளை துவக்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். இந்நிகழ்ச்சியில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ வளாகத்தை அவர் திறந்து வைக்கிறார்.
சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் 78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ வளாகத்தை திறந்து வைக்கிறார். தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு திருநெல்வேலியில் கடந்த சில நாட்களாக பல்வேறு ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு விழா நடைபெறும் அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பந்தலில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இங்கு நடைபெறும் அரசு விழாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவச பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் வழங்குகிறார். தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை சீரமைப்பு மற்றும் முதல்வர் கார் செல்லும் வழித்தடங்களில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணி இரவு பகலாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.