கிராம அரசுகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும், அதிகாரப்பகிர்வு மூலம் திட்டங்களை செயல்படுத்துவதிலும் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசின் ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பில், ‘மாநிலங்களில் அதிகாரப் பகிர்வு நிலை – சான்றுகள் அடிப்படையிலான தரவரிசை’ அறிக்கையை, மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல், 13-ம் தேதி வெளியிட்டார்.
இதில், கட்டமைப்பு, செயல்பாடுகள், நிதி, பிரதிநிதிகள், திறன் மேம்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய 6 குறிகாட்டிகளின் அடிப்படையில் மாநிலங்களின் செயல்பாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், பஞ்சாயத்துகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை செயல்படுத்துவதிலும், அதிகாரப்பகிர்வு மூலம் திட்டங்களை செயல்படுத்துவதிலும் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. செயல்படுத்தும் காரணிகளில் தமிழ்நாடு அதிக மதிப்பெண்கள் பெற்று, ‘திறன் மேம்பாடு’ மற்றும் ‘செயல்பாடுகளில்’ 2-வது இடத்திலும், நிதி பரிவர்த்தனைகளின் அடிப்படையில் 3-வது இடத்திலும் உள்ளது.
ஒட்டுமொத்த குறியீட்டில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் கிராமப்புற திட்டங்களில் பஞ்சாயத்துகளின் ஈடுபாடு மிக அதிக அளவில் உள்ளது என்று அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. ‘திறன் மேம்பாடு’ என்ற பரிமாணத்தில் கிராமப்புற உள்ளாட்சிகளுக்குப் பொறுப்பான பிரதிநிதிகளின் தேவைகளை மதிப்பிடுவதிலும், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சிகளை நடத்துவதிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. ‘பயிற்சி நிறுவனங்கள்’ குறியீட்டில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுவதாகவும் அறிக்கை காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.