மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு செயற்கையாக தடங்கல் ஏற்படுத்தி வருவதை கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஆண்டுகளில் பிங்க் புத்தகம் என்ற பெயரில் முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு குறித்த விவரங்களை நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு மட்டுமே வெளியிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். இந்த ஆண்டோ, பிங்க் புத்தகத்தையே வெளியிடாமல், தொகுக்கப்பட்ட பட்ஜெட் விவரங்களை தான் எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம் என்ற நிலைப்பாட்டுடன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என அவர் கூறினார்.

தமிழக திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்ததை விமர்சித்த பின் கூட மத்திய அரசு தெளிவான பதில் அளிக்க மறுத்ததாகவும், சில திட்டங்களை மட்டும் “சர்வே திட்டம்” என மாற்றியமைத்ததற்கான காரணமும் மறைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் தற்போது தெற்கு ரயில்வே பொதுமேலாளர் மே 14ஆம் தேதி ரயில்வே வாரியத்திற்கு எழுதிய கடிதத்தில் இந்த உண்மைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இந்தக் கடிதத்தில் 2019-ம் ஆண்டு ரயில்வே வாரியம் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், தமிழகத்தின் பல முக்கிய திட்டங்கள் முடக்கப்பட்டதாகவும், அவற்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தற்போது பயன்படுத்த முடியாததால் சரண்டர் செய்யப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை மற்றும் அத்திப்பட்டு-புத்தூர் திட்டங்களுக்கு ஒவ்வொன்றாக ரூ.42.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவை முடக்கப்பட்டதால் அந்த நிதியை ரயில்வே மீள்கொடுக்கிறது.
அதேபோல, ஈரோடு–பழனி புதிய பாதை திட்டத்திற்கான ரூ.52.13 கோடியும், மதுரை–தூத்துக்குடி வழியாக அருப்புக்கோட்டை புதிய பாதை திட்டத்திற்கான ரூ.55.16 கோடியும் சரண்டர் செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரம்–தனுஷ்கோடி திட்டம் சுற்றுச்சூழல் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. மேலும், காட்பாடி–விழுப்புரம், சேலம்–கரூர்–திண்டுக்கல், ஈரோடு–கரூர் ஆகிய மூன்று இரட்டை பாதை திட்டங்களும் திட்ட தயாரிப்பு கட்டத்தில் மட்டுமே உள்ளதாகவும், இவையாவற்றிற்கும் ஒதுக்கப்பட்ட ரூ.200 கோடி, ரூ.100 கோடி மற்றும் ரூ.100 கோடியும் செலவாகவில்லை எனவும் தெற்கரயில்வே தெரிவித்துள்ளது.
இத்தனை திட்டங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், ஏன் பிங்க் புத்தகம் வெளியிடப்படவில்லை என்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என சு. வெங்கடேசன் வலியுறுத்தினார். திட்டங்களை முடக்கிய பிறகே திட்டங்களில் இடையூறு ஏற்படுகிறது எனக் கூறுவது திட்டவட்டமான பொய்யாகும். மத்திய அரசு நிலம் கையகப்படுத்தப்படவில்லை என்றோசை எழுப்பி, திட்டங்களை தமிழகமே தாமதிக்கிறதென கூறியதும் தவறானது எனவும், உண்மையில் திட்டங்களை முடக்கியது மத்திய அரசு தான் எனவும் அவர் விளக்கியுள்ளார்.
தலைமையிலிருந்து திட்டங்கள் வரை எல்லாவற்றிலும் தமிழகம் புறக்கணிக்கப்படுவதைக் கண்டிக்க வேண்டிய நேரம் இது என கூறிய சு. வெங்கடேசன், நிறைவேற்றப்படாத திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.