சென்னை: தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கான செப்டம்பர் மாத உதவித்தொகை இன்று முதல் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு வாரங்களுக்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இந்தத் தொகை செலுத்தப்படும். இம்மாதத்திற்கான தொகை அடுத்த சில நாட்களில் அனைவருக்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், இந்த மாத உதவித்தொகை பெரும் கவனத்தை பெற்றுள்ளது. புதிய பயனாளிகள் சுமார் 2.30 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இந்த மாதம் 15ஆம் தேதி பணம் வழங்கப்படும். இதன் மூலம், புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புதிய ரேஷன் அட்டை பெற்றவர்கள் பயனடைவர்.
மாணவர்களுக்கான “புதுமைப்பெண்” மற்றும் “தமிழ் புதல்வன்” திட்டங்களின் தொகையும் இந்த வாரம் வழங்கப்பட உள்ளது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் எனப்படும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். மாணவிகள் கல்லூரி கல்வி தொடரும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
அதேபோல், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி செலவினத்திற்கு உதவியாக மாதம் ரூ.1000 வழங்கும் “தமிழ் புதல்வன்” திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. இதன் அடுத்த தவணை செப்டம்பரில் வழங்கப்படும். இதன் மூலம் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், மாதத்திற்கு ரூ.3000 வரை உதவித்தொகையைப் பெறுகின்றன.