தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் 137 பொறியியல் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், புதிய தொழில்களின் வளர்ச்சிக்கு ‘ஜிக்சா’ தளத்தைப் பயன்படுத்துவது தமிழ்நாட்டின் 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களுக்குக் கிடைக்கும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் அவர் கூறியதாவது:- கடந்த ஆண்டு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை ஏற்பாடு செய்த ‘உமேஜின் – 2024’ மாநாட்டில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ITN-Hub) உருவாக்கிய ‘ஜிக்சா’ தளத்தைத் தொடங்கி வைத்தார்.
கல்வி நிறுவனங்கள், தொழில், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் மாணவர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தமிழ்நாட்டில் ஆழமான தொழில்நுட்பங்களின் (டீப்டெக்) வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த தளம் தொடங்கப்பட்டது. அதன்படி, தொழில் மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்த அறிக்கைகளைப் பெறுதல், புதுமை நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுடன் தீர்வுகளைக் கண்டறிதல், தரவுகளை பகுப்பாய்வு செய்தல் மற்றும் தேவையான முன்மொழிவுகளை வழங்குதல், முதலீட்டாளர்களுடன் புதுமை நிறுவனங்களைச் சந்தித்தல் மற்றும் புதுமை நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் ஜிக்சா தளத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுவரை, 137 கல்வி நிறுவனங்கள், 303 புதுமை நிறுவனங்கள் மற்றும் 6,065 ஆராய்ச்சியாளர்கள் ஜிக்சா தளத்தில் பதிவு செய்துள்ளனர். 43 தொழில் நிறுவனர்கள், 69 முதலீட்டாளர்கள் மற்றும் 42 தொழில் வழிகாட்டிகள் இந்த தளத்தின் மூலம் புதுமை நிறுவனங்களை வழிநடத்துகின்றனர். இதற்கிடையில், தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் 137 பொறியியல் கல்லூரிகளுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையைத் தாண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற நகரங்களுக்கு ஜிக்சா பயன்பாடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.