சென்னை: தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா. கீதா வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, இன்று தமிழ்நாட்டிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
7-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 98.6-100.4 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82.4-84.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும். தெற்கு தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரி கடல், மத்திய-மேற்கு, மத்திய-கிழக்கு, வடக்கு மற்றும் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும்.
மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.