சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- பிப்ரவரி 15-ம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், சமவெளிப் பகுதியில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.2 டிகிரியும், குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 15 டிகிரி செல்சியஸும் பதிவானது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 21-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். இன்று ஒருசில இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரையிலும், 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 4 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் லேசான மூடுபனி காணப்படும். வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.