சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த நிறுவனம் மூலம் 1,250 ஆபரேட்டர்களை நியமிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள டெண்டர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையில் வியாசர்பாடி, பூந்தமல்லி, பெரும்பாக்கம், சென்ட்ரல், தண்டையார்பேட்டை பணிமனைகளில் இருந்து மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 625 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தினசரி 1,250 ஆப்பரேட்டர்களை வழங்கும் திறன் கொண்ட மனிதவள மேலாண்மை நிறுவனங்கள் ஏப்ரல் 23 முதல் இவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். ஆப்பரேட்டர்களின் ஊதியம் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவாக இருக்கக்கூடாது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை மாநகர போக்குவரத்து கழகம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மாதந்தோறும் வழங்கும். கண்டக்டர்களை கண்காணிக்க நிறுவனத்தில் 12 மேற்பார்வையாளர்களும் கூடுதலாக 390 கண்டக்டர்களும் இருக்க வேண்டும்.
ஆண் மற்றும் பெண் நடத்துனர்களுக்கான கல்வி மற்றும் உடல் தகுதியை பின்பற்றி பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்களின் நிதி நன்மைகள், பயோமெட்ரிக்ஸ், 8 மணி நேர வேலை போன்றவற்றுக்கு நிறுவனமே பொறுப்பாக இருக்க வேண்டும் மற்றும் கண்காணிக்க வேண்டும்.
சிறப்பாக செயல்படுவோருக்கு ஊக்கத்தொகை வழங்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்தால் அதற்கான தொகை சம்பந்தப்பட்ட நிறுவனம் மூலம் வழங்கப்படும். ஒப்பந்தத்தை மே 12-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.