சென்னை: ஐஐடி மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க சென்னை உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ‘பிட்ஜி’ என்ற தனியார் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையம் சென்னையில் கீழ்ப்பாக்கம் மற்றும் கேகே நகரில் இயங்கி வருகிறது. இந்த பயிற்சி மையங்களில் மொத்தம் 191 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மாணவர்களின் பெற்றோர் பயிற்சி காலத்திற்கான கட்டணத்தையும் செலுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், இந்த பயிற்சி மையம் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்காமல் திடீரென பயிற்சியை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர்கள் பயிற்சி மையத்தின் தமிழ்நாடு பிராந்தியத் தலைவர் அங்கூர் ஜெயின் மற்றும் இயக்குநர்கள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு மற்றும் மோசடி புலனாய்வுப் பிரிவு, 3 சிறப்புக் குழுக்களை அமைத்து விசாரணை நடத்தியது.
மேலும், கடந்த 9-ம் தேதி, கீழ்ப்பாக்கம், கே.கே. நகரில் உள்ள பயிற்சி மையங்கள் மற்றும் அங்கூர் ஜெயின் 2 வீடுகள் உட்பட 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் போது, ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள 22 காசோலைகள் மற்றும் மாணவர் அடையாள அட்டைகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயிற்சி மையத்தில் சேருவதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.