தஞ்சாவூர், பிப்.24- கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை பதிவு செய்து தஞ்சாவூருக்கு பெருமை சேர்த்துள்ளர் நிகழ்ச்சி தொகுப்பாளர் அஸ்வினி ஆனந்த்.
வெற்றி எனும் வேட்கை உள்ளத்திற்குள் ஊறிக் கொண்டே இருக்கும் வரை தோல்வி எனும் தடைகள் எப்போதும் கண் முன்னே வருவதும் இல்லை. காணப்படுவதும் இல்லை. தன்னம்பிக்கைதான் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகும். திறமை மட்டும் இருந்தால் போதாது. அனைத்து காரியங்களும் கை கூடாது. திறமையுடன் கூடிய நம்பிக்கைதான் வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். பெரும்பாலான சாதனைகள் சுலபமாக நடைபெற்று விட்டால் முயற்சி என்ற சொல்லுக்கு பொருள் இல்லாமலேயே போய் விடும். தன்னம்பிக்கை, திறமை, முயற்சி மூன்றும் இணைந்து இருப்பதே சாதனையை நோக்கி அழைத்துச் செல்லும் வழிப்பாதை.
வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும், நம்மை ஒரு படி மேலே ஏற்றி விடவே வருகின்றன. சோர்ந்து போகாதே. முன்னேற்றம் என்ற படியில் உயர்ந்து கொண்டு இருக்கிறாய் என்பதையும் மறந்து விடாதே. எந்த விஷயமாக இருந்தாலும் முயற்சி செய்து வீழ்ந்து எழுந்தால்தான் வெற்றியே கிட்டும். அப்படி வெற்றி பெற்றே தீரவேண்டும் என்பதை வைராக்கியமாய் வைத்து சாதனை படைத்துள்ளார் தஞ்சாவூர் தெற்குவீதியில் வசிக்கும் ஆர். கே. அஸ்வினிஆனந்த். இவர் நிகழ்ச்சி தொகுப்பாளர்.
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை பதிவேற்றி அதற்கு லைக்குகளை வாங்கி பலரும் வருமானம் பார்த்து வருகின்றனர். ஆனால் என் நோக்கம் அது இல்லை. பொழுதுபோக்கிற்காக பார்க்கப்படும் சமூக வலைதளத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற வேட்கையுடன் இவர் பழைய பேருந்து நிலையம் ராஜப்பாபூங்காவில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களோடு ஒரு புதுமையான சாதனையை மேற்கொண்டார்.
ஸ்பீட்ரீல்ஸ் என்ற தலைப்பில் ஒரே நிகழ்வில் 57 நிமிடத்தில் 95 ரீல்ஸ் ஒளிப்பதிவு செய்து தன் அஸ்வினிஆனந்த் விஜே இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். இதை இந்திய சாதனை புத்தகத்திற்கு அனுப்பினார். இந்திய சாதனை புத்தகம் கடந்த மாதம் ஜன. 30ம் தேதி இம்முயற்சியை அங்கீகரித்தது. ஒரே நிகழ்ச்சியில் அதிகபட்சமான ரீல்ஸ் வீடியோ உருவாக்கிய தனிநபர் அதை இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்தமைக்காக சாதனையாக அங்கீகரித்தது.
95 ரீல்ஸ் வீடியோவில் 6848 சொற்களும் 20544 எழுத்துகளும் பயன்படுத்தப்பட்டது. இவரை பொதுமக்களும் முக்கியபிரமுகர்களும் வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி இச்சாதனையை ஆசிய சாதனை புத்தகத்திலும் கிராண்ட்மாஸ்டர் என்ற தலைப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அஸ்வினிஆனந்த்திற்கு இது 10 சாதனையாகும். இந்நிகழ்ச்சிக்கு அருண்குமார் மாறவர்மன், பூங்காசரவணன், யோகேஷ், ரமேஷ், விக்னேஷ் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். இதற்கு முன்பு இந்திய, லிம்கா, ஆசிய சாதனைகள் செய்துள்ளார்.. 12 மணிநேரம் இடைவிடா மேடைநிகழ்ச்சியும், 75 மணி நேரம் இடைவிடா நேரலை நிகழ்ச்சியும், 36 நிமிடத்தில் 7500 சொற்களை விரைவாக பேசியும், 58 நொடியில் 305 சொற்களை விரைவாக பேசியும், 30 நிமிடத்தில் 70 நபர்களோடு போட்டி நிகழ்ச்சி நடத்தியும் உள்ளார்.
இந்தியாவில் மொபைலில் உருவாக்கப்பட்ட மிக நீளமான படமாக 2.50 மணிநேரம் ஓடக்கூடிய கானா என்கிற கர்மா-2 தயாரித்து, இயக்கியும் சாதனை படைத்துள்ளார். சோஸியல் மீடியாவிலும் அடையாளம் என்ற தலைப்பிலும் நம்ம ஏரியா என்ற தலைப்பிலும் தஞ்சாவூர் பகுதியிலுள்ள பழமையான விஷயங்களையும் படமாக்கி அஸ்வின்டாக்கீஸ் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அஸ்வினிஆனந்த் கூறுகையில், என் முயற்சிகள் இத்துடன் நின்று விடாது. மேலும் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொள்ள உள்ளேன். அடுத்த முயற்சி இன்னும் பெரிதாய் இருக்கும் என்றார்.