சென்னை: தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கான விண்ணப்பங்களை தமிழக அரசு வரவேற்கிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகுதி விவரங்களை https://www.tn.gov.in/dept_profile.php?dep_id=MzA= (சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு புகைப்படத்துடன் கூடிய படிவத்தில் விண்ணப்பித்து, செயலாளர், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், எண்.183/1, ஈ.வே.ரா. பெரியார் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10, மார்ச் 20 மாலை 5.30 மணிக்குள் வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். முறையாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சென்றடையாத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும். இந்த விஷயத்தில் அரசின் முடிவே இறுதியானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.