சென்னை: சென்னையில் பிராட்வே பேருந்து நிலையம் பழமையானது. தினமும் 50,000-க்கும் மேற்பட்டோர் இந்த பேருந்து நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். ரூ.823 கோடி செலவில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக மாற்றும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் முழுமையாக இடிக்கப்பட உள்ளன. பின்னர், அங்கு 9 மாடி வணிக வளாகம் கொண்ட நவீன பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.

இதேபோல், பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடி வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் 168 கடைகள் இயங்கி வந்தன. 45 குடும்பங்கள் அங்கு வசித்து வந்தன. கடைகள் மற்றும் குடும்பங்கள் மாநகராட்சியால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன. பேருந்து நிலையத்தின் புனரமைப்பு பணிகள் முடியும் வரை, ராயபுரம் ரயில் நிலையம் அருகே இப்ராஹிம் சாலையில் சென்னை துறைமுகத்திற்குச் சொந்தமான 3.45 ஏக்கர் இடத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒரு தற்காலிக பேருந்து நிலையத்தை மாநகராட்சி கட்டி வருகிறது.
இந்த இடத்திற்கு சென்னை துறைமுகம் ஆண்டுக்கு ரூ.3.86 கோடி வாடகை நிர்ணயித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ராயபுரம் இப்ராஹிம் சாலையில் தற்காலிக பேருந்து நிலையம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு தங்குமிடம், பயணிகள் இருக்கைகள், கழிப்பறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தற்காலிக பேருந்து நிலையம் ஜூன் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.