சென்னை: மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 4-வது வழித்தடத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பகுதியில் மெட்ரோ மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை ஒற்றை வழித்தடத்தில் (4-வது வழித்தடம்) மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. கலங்கரை விளக்கத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையும், பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
பல இடங்களில் மெட்ரோ ரயில் பாதை கட்டுமானம் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பகுதியில் மெட்ரோ மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் கூறியதாவது:-
கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வழித்தடத்தில், 26.1 கி.மீ., தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் கட்டப்பட உள்ளன. இதில், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பகுதியில் 22 மீட்டர் அகலம் மற்றும் 140 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் கட்டும் பணி மெட்ரோ ரயில் நிலையம் தொடங்கியுள்ளது. பயணிகளுக்கான 4 மின் தூக்கிகள், 9 நகரும் நடைபாதைகள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் வழித்தடத்தின் ஒரு பகுதியான பூந்தமல்லி வரை மேம்பாலம் கட்டும் பணி 55 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும். இவ்வாறு கூறினார்கள்.