சென்னை: கோவை மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், மருதமலை வனப்பகுதியில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்றும், அந்தப் பகுதியில் யானைகள் தடங்கள் இருப்பதால், அந்த இடத்தை யானைகள் பாதையாகப் பயன்படுத்துவதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நீலகிரி வனப்பகுதியில் இருந்து மற்ற வனப்பகுதிகளுக்குச் செல்ல யானைகள் இந்தப் பகுதியைப் பாதையாகப் பயன்படுத்துவதாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் பகுதியில் 184 அடி உயர முருகன் சிலை அமைப்பது வனச் சூழலைப் பாதிக்கும் என்றும், யானைப் பாதைகள் துண்டிக்கப்படும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

விலங்கு-மனித மோதல்கள் அதிகரிக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. வனத்துறையின் ஒப்புதல்கள் பெறப்படாததால், முருகன் சிலை கட்டுவதை நிறுத்துமாறு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் கோரப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, மனுவுக்கு பதிலளிக்குமாறு இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 2-வது வாரத்திற்கு ஒத்திவைத்தது.