ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஊட்டி விஜயநகரம் பகுதியில் அமைந்துள்ள ரோஜா பூங்காவில் 1,500 வகையான 35,000 ரோஜா செடிகள் உள்ளன.
மேலும், இந்த ரோஜா தோட்டத்தில் பாரம்பரிய ரோஜாக்களுக்கு தனி இடம் உள்ளது. பாரம்பரிய ரோஜா தோட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாரம்பரிய ரோஜா செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இவற்றை கண்டு மகிழ்வர். வழக்கமாக மே மாதம் கோடை சீசனுக்காக அனைத்து பூங்காக்களையும் தயார்படுத்தும் பணி டிசம்பர் மாதம் முதல் தொடங்கும்.

ரோஜா தோட்டத்தில் உள்ள அனைத்து ரோஜா செடிகளும் ஜனவரி தொடக்கத்தில் சீரமைக்கப்பட்டு பராமரிக்கப்படும். இதன் மூலம் ஏப்ரல் மாதம் முதல் அனைத்து செடிகளும் பூத்துக் குலுங்கும். ஒரே நேரத்தில் சீரமைப்பு பணியை மேற்கொண்டதால், பூங்கா முழுவதும் பூக்கள் இல்லாமல், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வரும் சுற்றுலா பயணிகள் பூக்களை காணாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
இதை தவிர்க்கும் வகையில், பூங்காவின் மேற்பகுதியில் உள்ள பாத்திகளில் ரோஜா செடிகள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பகுதியில் உள்ள பாத்திகள் கடந்த மாத இறுதியில் முழுமையாக சீரமைக்கும் பணியை மேற்கொள்ளாமல் சீரமைக்கப்பட்டது. இவை தற்போது துளிர்விட்டு, உரமிட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, அவை விரைவில் பூக்கத் தொடங்கும் என்றும், மற்ற செடிகளும் அடுத்த மாதம் சீரமைக்கப்படும் என, தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர்.