சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி. பாலாஜி, சந்தானம் நடித்த ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் திருப்பதி வெங்கடேச பெருமாளை இழிவுபடுத்துவதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், குறிப்பிட்ட பாடலில் உள்ள ஆட்சேபனைக்குரிய வரிகள் நீக்கப்பட்டு, பாடலின் இசை முடக்கப்படும் என்று உறுதியளித்தார்.

அதைத் தொடர்ந்து, பாடல் வரிகள் நீக்கப்பட்டு, இசை முடக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து தெரிவிக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாடல் நீக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது. இதை கவனத்தில் கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதால், வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.