தூத்துக்குடி: ஆவணி கடைசி முகூர்த்த தினத்தை ஒட்டி திருச்செந்தூர் கோயிலில் நேற்று ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த நிலையில், ஆவணி மாதம் கடைசி முகூர்த்த தினத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. கோவிலுக்கு உள்ளே செல்ல முடியாதவர்கள் கோவில் முன்பகுதியிலும், பிரகாரங்களிலும், நின்று திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தை நடத்துவதற்காகவும், மணமக்களை வாழ்த்துவதற்காகவும் வந்திருந்த உறவினர்கள் கூட்டத்தால் திருச்செந்தூர் கோயில் வளாகம் கூட்ட நெரிசலாக காணப்பட்டது. மேலும் சன்னதி தெரு, ரதவீதிகள் உள்ளிட்ட திருச்செந்தூர் முக்கிய வீதிகள், மண்டபங்களிலும் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றதால் திருச்செந்தூர் நகரம் நெரிசலாக காணப்பட்டது.