தாளவாடி: ஊருக்குள் புகுந்து சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய ஒற்றை யானையால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக தாளவாடி, ஆசனூர், பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
சமீப காலமாக உணவு, தண்ணீரை தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தாளவாடி அடுத்த அருள்வாடி புரம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தன.
யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினாலும் மீண்டும் அந்த ஒற்றை யானை கிராமத்துக்குள் வந்தது. இந்நிலையில் நேற்று இரவு தாளவாடி ஊருக்குள் ஒற்றை யானை புகுந்தது. அந்த பகுதியில் உள்ள நேதாஜி சர்க்கிள் என்னும் இடத்தில் இருந்த சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்தி உள்ளது.
இதுவரை கிராமத்துக்குள் புகுந்த யானை தற்போது முதல் முதலாக தாளவாடி ஊருக்குள் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.