சென்னை: டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றமாகக் கருத முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பு மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, மே 2016-ல் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பு போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டம் முறையான அனுமதியின்றி நடத்தப்பட்டதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறி, சேத்தியாத்தோப்பு போலீசார் மக்கள் அதிகாரம் நிர்வாகிகளான முருகானந்தம் மற்றும் மணிமாறன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
முருகானந்தம் உள்ளிட்டோர் சிதம்பரம் முதலாவது இடைநிலை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முருகானந்தம் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன் நடைபெற்றது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ. சுரேஷ் சக்திமுருகன், உள்ளூர் மக்களின் நலனுக்காக போராட்டம் அமைதியாக நடத்தப்பட்டதாகவும், டாஸ்மாக் கடை மக்கள் அடர்த்தியான பகுதியில் அமைந்துள்ளதாகவும், போராட்டத்தின் போது எந்த அசம்பாவிதமும் நடக்காத நிலையில், யாரும் புகார் அளிக்காத நிலையில், காவல்துறையினர் தாங்களாகவே வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ். வினோத்குமார், எந்த அனுமதியும் இல்லாமல் போராட்டம் நடத்தப்பட்டதாகவும், இது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “குடியிருப்பு பகுதிகளில் செயல்படும் மதுபானக் கடைகளால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள், குறிப்பாக அந்தப் பகுதி பெண்கள், நியாயமான கவலைகளைக் கொண்ட சந்தர்ப்பங்களில், அமைதியான போராட்டங்களை ஒரு குற்றமாகக் கருத முடியாது.
ஆளும் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களின் போது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாக உறுதியளித்திருந்தாலும், உண்மையில் இந்தக் கடைகள் மூடப்படுவதற்குப் பதிலாக வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றன, இதனால் முக்கிய பிரச்சினை தீர்க்கப்படாமல் விடப்படுகிறது. இதுபோன்ற அமைதியான போராட்டங்களில் பங்கேற்கும் ஒவ்வொரு நபர் மீதும் காவல்துறை குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்தால், அது ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது, மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் இதேபோன்ற போராட்டங்களில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பெண்கள் மீதும் வழக்குத் தொடர வேண்டியிருக்கும்.
அமைதியான போராட்டங்கள், குறிப்பாக பொது சுகாதாரம் மற்றும் சமூக நலனைப் பாதிக்கும் விஷயங்களில், அரசியலமைப்புச் சட்டப்படி பாதுகாக்கப்படுகின்றன என்று கூறிய நீதிபதி, சிதம்பரம் நடுவர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். போராட்டங்கள் அமைதியாகவும் வன்முறையற்றதாகவும் தொடர்ந்தால், பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும், அரசாங்கத்திடமிருந்து தங்கள் உரிமைகளைக் கோரவும் முடியும் என்று கூறினார்.