சென்னை: மின் பயன்பாட்டை துல்லியமாக அளவிடவும், மின் இழப்பை தடுக்கவும், மின் அளவீட்டில் முறைகேடுகளை தடுக்கவும், வருவாயை அதிகரிக்கவும், வீடுகள் உள்ளிட்ட மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த, அனைத்து மாநில மின் வாரியங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், 2026-ம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்குள் திட்டத்தை செயல்படுத்தினால், மத்திய அரசு வழங்கும் நிதியுதவி மானியமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, திருப்பி செலுத்த வேண்டியதில்லை.
இல்லையெனில், அது கடனாக மாற்றப்பட்டு, திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். அதன்படி, ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்தது. இதற்காக, 2023-ல், பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய, 4 தொகுதிகளில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, 10 ஆண்டுகளுக்கு பராமரிக்க, ஒப்பந்ததாரரை தேர்வு செய்ய, டெண்டர் விடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, 8 மாவட்டங்களில் மட்டும் 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது.
இதில், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் பங்கேற்று, குறைந்த விலையை குறிப்பிட்டது. ஆனால், மின்சார வாரியம் நிர்ணயித்த தொகையை விட அதிகமாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விரைவில் விடப்படும் என மின்சார வாரியம் அறிவித்தது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 128-வது வாரியக் கூட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்வதற்கான புதிய டெண்டர் விடப்பட்டது. இதையடுத்து, ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விடும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.