அம்பை: நெல்லை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். கடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால், நேற்று முன்தினம் மூன்றாவது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது மழை முற்றிலும் நின்றதால், நேற்று முன்தினம் இரவு முதல் அருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.
இதன் காரணமாக நேற்று முதல் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இன்று விடுமுறை தினம் என்பதால் அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.