தென்காசி: தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடலோர தமிழகம் மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நேற்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, குற்றால அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாதுகாப்பு கருதி குற்றாலம் பிரதான அருவியில் சுற்றுலாப் பயணிகள் 3-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றமடைய செய்துள்ளது. ஐந்தருவி மற்றும் பிரதான அருவிகளில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.