நெய்வேலி: நெய்வேலி என்எல்சி ஆர்ச் கேட் பகுதியில் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நெய்வேலியை அடுத்த ஊராட்சியான என்எல்சி ஆர்ச் விக்கிரவாண்டி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக வடக்கு ஆர்ச் கேட் முதல் இந்திரா நகர் எம்ஆர்கே சாலை வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக என்.எல்.சி ஆர்ச் கேட் முன்புறம் சாலைகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கடைகளை வாடகைக்கு எடுத்துள்ளவர்கள், தாங்கள் வாடகைக்கு இருக்கும் கடையின் அளவை விட, சாலையில் அதிக இடத்தை ஆக்கிரமித்து உள்ளனர். மேலும், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நடுரோட்டில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், விகேடி தேசிய நெடுஞ்சாலை பணிக்காக என்எல்சி ஆர்ச் கேட் முன்பு தோண்டப்பட்ட பள்ளத்தால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சாலையில் செல்லும் கனரக வாகனங்கள், பள்ளி வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் போன்றவை தோண்டப்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
மேலும், சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் குப்பை, கழிவுகள் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உரிய அதிகாரிகள் அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.