திருவனந்தபுரம் : கிணற்றில் தவறி விழுந்து குட்டியானை பரிதாபமாக இருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் செருபுழா அருகே உள்ள ஜோஸ் கிரி பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 38). விவசாயி. இவரது விளைநிலத்தில் உள்ள 20 அடி ஆழ கிணற்றுக்குள் குட்டியானை ஒன்று தவறி விழுந்தது. இது தெரியாமல், நேற்று மகேஷ் மோட்டாரை இயக்கி போது, குழாயில் தண்ணீர் வரவில்லை.
பின்னர் கிணற்றுக்குள் பார்த்த போது, குட்டி யானை இறந்து கிடந்தது. தகவல் அறிந்த செருபுழா வனத்துறையினர் விரைந்து வந்து குட்டி யானையின் உடலை மீட்டனர்.
பின்னர் கால்நடை டாக்டர்கள் குழுவினர் குட்டி யானை உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
எனவே, காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.