சென்னை: இது குறித்து, தெற்கு ரயில்வே, சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- சென்னை கடற்கரை யார்டில் நடைபாதைப் பணிகள் நடைபெற்று வருவதால், கடற்கரை – வேளச்சேரி, அரக்கோணம் வழித்தடத்தில் இன்று மற்றும் நாளை சில புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வேளச்சேரி – கடற்கரை இடையே இரவு 9, 9.40, 10.20 மணிக்கும், கடற்கரை – வேளச்சேரி இடையே இரவு 10.20 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், கடற்கரை – வேளச்சேரி இடையே காலை 5, 5.30, 6, 6.30, 7.05, 7.25, 7.45 மணிக்கும், வேளச்சேரி – கடற்கரை இடையே காலை 5, 5.30, 6, 6.15, 6.35 மற்றும் 6.55 மணிக்கும் ரயில் சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். இருப்பினும், பயணிகளின் வசதிக்காக, வேளச்சேரி – கடற்கரை இடையே காலை 5, 5.30, 6, 6.35 மற்றும் 7 மணிக்கும், சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே காலை 6, 6.30, 7, 7.35 மற்றும் 8 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

மேலும், சென்னை கடற்கரையில் இருந்து ஆவடிக்கு அதிகாலை 4.05 மணிக்கும், திருவள்ளூருக்கு 5.10, 5.40, 6.10 மணிக்கும், ஆவடியில் இருந்து கடற்கரைக்கு காலை 4.35, 5.40, 7.05 மணிக்கும் இயக்கப்படும் ரயில் சேவைகள் நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்படும். இருப்பினும், பயணிகளின் வசதிக்காக, ஆவடியில் இருந்து அரக்கோணத்திற்கு காலை 5 மணிக்கும், ஆவடியில் இருந்து திருவள்ளூருக்கு காலை 6, 6.45 மற்றும் 7.05 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
சென்னை கடற்கரையில் இருந்து பொன்னேரிக்கு காலை 5.40 மணிக்கு செல்லும் ரயில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திலிருந்து நாளை புறப்படும். கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை இடையே இரவு 8.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று பேசின் பிரிட்ஜ் வரை மட்டுமே இயக்கப்படும். பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-சென்னை கடற்கரை இடையே இரவு 8.25 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவை இன்று ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.