சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் 50 குளிரூட்டப்பட்ட (ஏசி) பஸ்கள் உட்பட 3,056 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், கட்டணத்துடன் கூடிய பயண அட்டைகள் ரூ. 320 முதல் ரூ. 1,000 வரை கட்டணம் ஏசி தவிர மற்ற பஸ்களில் பயணிக்க வழங்கப்படுகிறது. ரூ.1,000 பயண அட்டை மூலம் ஏசி தவிர மற்ற அனைத்து பேருந்துகளிலும் விருப்பப்படி பயணிக்கலாம்.
225 ஏசி பஸ்கள் உட்பட 650 மின்சார பஸ்களை மாநகர போக்குவரத்து கழகம் விரைவில் வாங்க உள்ளது. மே மாதம் முதல் ஏசி பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோடை வெயிலும் அதிகரித்து வருவதால் ஏசி பஸ்களில் பயணம் செய்ய பலர் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ரூ.2000 கட்டணத்துடன் கூடிய பயண அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏசி பேருந்துகள் உட்பட அனைத்து வகை பேருந்துகளிலும் மக்கள் தங்கள் விருப்பப்படி பயணம் செய்யலாம். தற்போது திருப்போரூர், சிறுசேரி டெக் பார்க், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன. புதிய பஸ்கள் வந்தவுடன், தேவைக்கு ஏற்ப பல்வேறு வழித்தடங்களில் இயக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்கள்.