திருச்சி மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை நிறைவு செய்து, தற்போது திறப்பு விழாவுக்குத் தயாராகியுள்ளது. மே 9ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைக்கிறார்.
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் முக்கிய நகரமாக கருதப்படும் திருச்சி, மாநிலத்தின் மையப் பகுதியாக இருப்பதால் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்து முனையமாக உள்ளது. இதனாலேயே இந்த புதிய திட்டம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.

நகருக்குள் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, நகரத்திற்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பஞ்சப்பூரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
சுமார் ரூ.400 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கட்டப்படுகின்றது. தற்போது எல்லா கட்டுமான பணிகளும் முடிவடைந்து, பொது பயன்பாட்டுக்குத் தயாராகியுள்ளது.
பஞ்சப்பூர் பேருந்து நிலையம் சென்னையின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போலவே பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதில் ஏசி வசதியுடன் கூடிய காத்திருப்பு கூடங்கள், லிஃப்ட், எஸ்கலேட்டர்கள், சர்வீஸ் மையங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்து நிறுத்தங்கள், உணவகம், கழிவறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், நடைபாதை மற்றும் பூங்கா ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இப்பகுதியில் டைடல் பார்க், சோலார் மின் திட்டம், சரக்கு வாகன நிறுத்தம் போன்ற பல கட்டமைப்புகள் செயல்படுத்தப்பட உள்ளன. தற்போதைய நிலையில், தமிழக அமைச்சரான கே.என். நேரு நேரில் ஆய்வு மேற்கொண்டு, ஓட்டுனர்களுக்கான வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியுள்ளார்.
திருச்சியின் போக்குவரத்து சிக்கல்களை குறைக்கும் முக்கிய முயற்சியாக இந்த புதிய பேருந்து நிலையம் அமையவிருக்கிறது. இதன் மூலமாக திருச்சி நகரத்தில் உள்ள போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், மாநிலத்தின் போக்குவரத்து கட்டமைப்பில் ஒரு புதிய மைல்கல் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.