சென்னை: பொதுமக்கள் அவசர பணத் தேவைக்காக வங்கிகளில் நகைக்கடன் பெறுவது அவசியம். விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை, எளிய மற்றும் விவசாயிகள் தங்களுடைய தேவைகளுக்கு நகைக் கடனையே பெரிதும் நம்பியுள்ளனர். தனியார் நிறுவனங்களில் நகைகளை அடகு வைத்தால், அதிக வட்டி கொடுக்க வேண்டி வரும். இதனால் பலர் வங்கிகளில் நகைக்கடன் வாங்குகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை வட்டியை திருப்பிச் செலுத்தலாம் என்ற விதிகள் இருப்பதால் பலர் வங்கிகளில் நகைக் கடன் வாங்க விரும்புகிறார்கள். இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் வங்கிகளில் நகைக் கடன் வாங்கும் பலர் தற்போது மிகுந்த கவலையில் உள்ளனர்.
நகைக்கடன் வாங்கியவர்கள் நகைக்கடனை மீண்டும் அடமானம் வைக்க கடுமையான நிபந்தனைகளுடன் புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, வங்கியில் அடகு வைத்த நகைகளை, முழுத் தொகையையும் செலுத்திய மறுநாளே மீண்டும் அடகு வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டியை மட்டும் செலுத்தி அன்றே மீண்டும் அடகு வைக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கியவர்கள் முழுத் தொகையையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், நகைகளை திரும்ப செலுத்தி, நகையை திருப்பி கொடுத்த மறுநாளே பணத்தை பெற முடியும். ரிசர்வ் வங்கியின் இந்த விதிகள் ஏழை, எளிய மக்களுக்கு, குறிப்பாக சிறு, குறு விவசாயிகள், சிறு வணிகர்களுக்கு பெரும் பாதிப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. வட்டிக்கு பணம் கொடுத்து நகைகளை மீண்டும் அடகு வைக்கும் வாய்ப்பு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், தற்போது நகைக்கடனுக்கான அசல் வட்டி முழுவதையும் கட்ட வேண்டும் என்ற தடையால், வங்கிகளில் நகைக்கடனை நம்பி இருப்பவர்கள், கந்துவட்டியால் அவதிப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கூடுதல் நிதி பெறுவதற்கு முன், கடன் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்தும் சுமை அதிகமாக இருக்கும். இந்த மாற்றம் நிதி ஆதாரங்களை கடுமையாகப் பாதிப்பது மட்டுமல்லாமல், அதிக வட்டி விகிதத்தில் தனியாரிடம் முறைசாரா கடன் அல்லது கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படும் சூழ்நிலையையும் உருவாக்கும். இந்த புதிய வழிகாட்டுதல்களின் நோக்கம் மிகவும் வெளிப்படையான மற்றும் நியாயமான கடன் வழங்கும் சூழலை வளர்ப்பதே என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது.
ஆனால், இந்த விதிமுறைகளை அமல்படுத்தியதால், மருத்துவத் தேவைகள், கல்விச் செலவுகள் போன்ற அவசரத் தேவைகளுக்கு நகைக்கடனையே பெரிதும் நம்பியிருக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மிகவும் சிரமப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, மத்திய நிதி அமைச்சகம் தலையிட்டு, பொதுமக்கள் நகைக்கடன் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்களை திரும்பப் பெற்று, பழைய விதிமுறைகளை வங்கிகள் பின்பற்ற வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ கூறினார்.