சென்னை: வெஜ் – கிரேவி, ஃபுருட் சாலட் உணவுகள் தயாரிப்பது குறித்த பயிற்சி வகுப்பு கிண்டியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க ஆர்வமுள்ள தரப்பினரை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அழைத்துள்ளது. பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி. அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-
பல்வேறு வெஜ் கிரேவி உணவுகள் தயாரிப்பது குறித்த பயிற்சி புதன்கிழமை அன்று சென்னை கிண்டியில் செயல்படும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வழங்கப்படும். இதில், பன்னீர் பட்டர் மசாலா, கடாய் பன்னீர், பன்னீர் டிக்கா மசாலா, தால் மக்கனி, ரொமாலி ரொட்டி, நான் பரோட்டா, மலாய் கோதா, தவா சப்ஜி, ரெட் கிரேவி, வெள்ளை குழம்பு, அலு மேத்தி போன்றவற்றை எப்படி செய்வது என்று மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும்.

இதேபோல், வியாழக்கிழமை நடைபெறும் பல்வேறு வகையான சூப்கள் மற்றும் சாலடுகள் தயாரிப்பது குறித்த பயிற்சியில், தக்காளி சூப், கிளியர் வெஜிடபிள் சூப், ஸ்வீட்கார்ன் சூப், பார்லி வெஜிடபிள் சூப், கேரட் கொத்தமல்லி சூப், முருங்கைக்காய் சூப், கீரை சூப், பச்சை சாலட், ரஷ்ய சாலட், வெள்ளரி சாலட், முட்டைக்கோஸ் சாலட், பழ சாலட் மற்றும் முளைகட்டிய பயிர் சாலட் ஆகியவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
தொழில்முனைவோர், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் 044-29530048 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.