சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரமான உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இனிப்பு கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் அக்டோபர் 11 அன்று சென்னை திருநகரில் நடைபெற்றது. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அதிகாரி தமிழ்செல்வன், “இனிப்பு மற்றும் இனிப்பு வகைகள் விற்பனை செய்யும் அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். உரிமம் இல்லாமல் விற்பனை செய்தால், சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், இனிப்பு மற்றும் காரப் பொருட்களை தயாரிக்கும் போது, தரமான மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, சுத்தமான, சுகாதாரமான மற்றும் கலப்படமற்ற முறையில் தயாரிக்க வேண்டும்.

இனிப்புகளில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பரிசுப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட இனிப்புகளை உணவுப் பாதுகாப்புத் துறையின் ‘லேபிள்’ விதிமுறைகளைப் பின்பற்றி விற்க வேண்டும் என்று வணிகர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை குறித்து வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிந்தால், 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.