மேட்டூர் / தர்மபுரி: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்து வருவதால், 16 மதகுகள் வழியாக உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், காவிரி டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு வினாடிக்கு 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 19,850 கன அடியாக இருந்த மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நேற்று மாலை 10,850 கன அடியாகக் குறைந்தது. அணையின் 16 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றம் நேற்று காலை 10 மணிக்கு நிறுத்தப்பட்டது. தற்போது உபரி நீர் வெளியேற்றம் 6 நாட்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காவிரி டெல்டாவில் பாசனத்திற்காக நீர் மின் நிலையங்கள் மூலம் நீர் திறப்பு நேற்று மாலை முதல் வினாடிக்கு 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்காக 850 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல், உபரி நீர் காரணமாக ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு வினாடிக்கு 24,000 கன அடியாகவும், மாலையில் 18,000 கன அடியாகவும் பதிவான நீர்வரத்து நேற்று காலை 6 மணிக்கு 14,000 கன அடியாகவும், மதியம் 2 மணிக்கு 9,500 கன அடியாகவும் குறைந்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்தும் படிப்படியாகக் குறைந்து வருகிறது.