ஜல்லிக்கட்டு போட்டியின் போது முறைகேடுகளை தடுக்க கியூ.ஆர். கோடு மற்றும் ஆதார் எண்ணுடன் டோக்கன் வழங்கப்படுகிறது
![](https://vivegamnews.com/wp-content/uploads/2023/01/20f-6-1024x569.jpg?v=1673618052)
மதுரை,
பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். முக்கியமாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றவை. இதில் முதலாவதாக வரும் 15ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளை கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் மூன்று மண்டலங்களில் ஏதாவது ஒரு போட்டியில் மட்டும் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்பதற்கான முன்பதிவு கடந்த 10ம் தேதி துவங்கிய நிலையில், மாடுபிடி வீரர்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் விறுவிறுப்பாக முன்பதிவு செய்தனர். நேற்று மாலை 5 மணியுடன் முன்பதிவு முடிந்தது. பதிவு செய்தவர்களின் சான்றுகளை சரிபார்த்த பின், தகுதியானவர்கள் டோக்கன்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்தவர்களுக்கு கியூஆர் குறியீடு மற்றும் ஆதார் எண் அடங்கிய டோக்கன் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க 9,699 காளைகள், 5,399 மாடுபிடி வீரர்கள் என மொத்தம் 15,098 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு டோக்கனை பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. போட்டியின் போது முறைகேடுகளைத் தடுக்க கியூஆர். கோடு, ஆதார் எண்ணுடன் டோக்கன் வழங்கப்படுகிறது.