உடல்நலம் என்பது வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம். இன்று நோய், அவசர சிகிச்சை அல்லது மருத்துவச் செலவுகள் எப்போது நேரிடும் என்பது தெரியாது. அப்போது ஏராளமான பணச் செலவுகள் ஏற்படக்கூடும். இதற்கான தீர்வாக மத்திய அரசு மக்கள் நலன் கருதி செயல்படுத்தும் முக்கிய திட்டம்தான் பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் யோஜனா. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள இந்தியக் குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது. அதற்காக ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் கார்டு வழங்கப்படுகிறது.

இந்தக் கார்டை வைத்திருப்பவர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு அரசு மற்றும் பங்கேற்கும் தனியார் மருத்துவமனைகளில் முழுமையாக இலவசமாக சிகிச்சை பெற முடியும். இந்த சுகாதாரக் காப்பீடு திட்டம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்காக உருவாக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் பதிவு செய்யத் தேவையான தகுதிகளை மத்திய அரசு முன்வைத்துள்ளது. தங்களது தகுதி பற்றி தெரிந்துகொள்ள 14555 என்ற எண்ணுக்கு அழைக்கலாம், அல்லது ‘Ayushman Bharat’ மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து பயனாளி நிலையைச் சரிபார்க்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் beneficiary.nha.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட வேண்டும். அங்கே உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி உள்நுழைந்து OTP மூலம் உறுதிப்படுத்த வேண்டும். பின்னர் திட்டம், மாநிலம், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களை தேர்ந்தெடுத்து உங்கள் ஆதார் எண்ணை வழங்கி தேடலாம். உங்கள் பெயர் பட்டியலில் இருந்தால், ‘Action’ எனும் விருப்பத்தை கிளிக் செய்து, KYC செயல்முறையை Aadhaar OTP மூலம் முடிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து புகைப்படத்தை பதிவேற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்து முழுமையான விவரங்களை உள்ளிட்டு, உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். தகுதி மதிப்பெண் 80 சதவீதத்திற்கு மேல் இருந்தால், உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பிறகு, Ayushman Bharat போர்ட்டலிலிருந்து உங்கள் ஹெல்த் கார்டை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம். இந்தக் கார்டு மூலம் சுமார் 10,000க்கும் மேற்பட்ட மருத்துவ வசதிகள் இலவசமாக பெறலாம்.
இந்த திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் உழைக்கும் மக்கள் ஆரோக்கியப் பாதுகாப்பைப் பெற முடிகிறது. நோயால் ஏற்பட்ட பொருளாதார சுமையைச் சரிசெய்யும் வகையில் இந்த திட்டம் மிகப் பெரிய நன்மை அளிக்கிறது. ஆகவே தகுதியுள்ளவர்களாக நீங்கள் இருந்தால், இத்திட்டத்தில் உடனே பதிவு செய்து பயனடையுங்கள்.