இந்திய ரிசர்வ் வங்கி (RBI), மத்திய அரசுக்கு 2024-25 ஆம் நிதியாண்டிற்கான டிவிடெண்ட் தொகையாக ரூ.2.69 லட்சம் கோடியை வழங்கும் என்று அறிவித்துள்ளது. இது வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகமான ஈவுத்தொகையாகும். இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச மற்றும் உள்நாட்டு பொருளாதார சூழ்நிலைகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது தற்போதைய நிதிச்சுமையை சமாளிக்க அரசுக்கு பலனளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உபரி தொகை, மத்திய அரசின் 4.4 சதவீத நிதிப்பற்றாக்குறையை சமன்செய்ய முக்கிய பங்கு வகிக்கவுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள திருத்தப்பட்ட ECF கொள்கையை பின்பற்றி, ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், மைக்ரோ பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு CRB விகிதத்தை 6.5 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாக உயர்த்துவதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 நிதியாண்டில் ரிசர்வ் வங்கி அரசுக்கு ரூ.87,416 கோடி டிவிடெண்ட் தொகையை வழங்கியது. ஆனால் 2024-25 இல் வழங்கப்படவுள்ள ரூ.2.69 லட்சம் கோடி, இதைவிட மூன்றிரட்டை அதிகம். இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய வளர்ச்சியாகவும், அரசுக்கு கிடைக்கும் நிதியில் பெரும் முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.
பொருளாதார நிபுணர்கள், இந்த நிதி ஒதுக்கீடு நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனக் கருதுகின்றனர். துறைசார்ந்த பயன்களை அடைய இந்த தொகையை உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற பணிகளுக்கு பயன்படுத்த அரசு முடிவெடுக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநில அரசுகளுக்கு சம உரிமை அளிக்கும்படி எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. இந்த நிதியை பிரித்து தருவதில் பாரபட்சம் இல்லாமல் செயல்பட வேண்டும் எனவும், மக்கள் நலனில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த டிவிடெண்ட் தொகை, இந்திய பொருளாதாரத்தின் நிலை மற்றும் வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்புகளுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் செய்தியாக இருக்கிறது. அரசின் செலவுத் திட்டத்திலும், வருங்கால திட்டங்களிலும் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய அரசின் வளர்ச்சி நோக்கங்களை முன்னெடுக்க இந்த நிதி உறுதி செய்யப்பட்ட ஆதரவாக அமையும்.