நேற்றைய வர்த்தக நாளில், பங்குச்சந்தை குறியீடுகள் தொடர்ந்து நான்காவது நாளாக உயர்வை கண்டன. கடந்த மூன்று வாரங்களாக சந்தையில் இருந்த சரிவு இந்த வாரத்தில் முடிவுக்கு வந்தது. இருப்பினும், கடந்த 24 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் அதிகபட்ச இழப்பை சந்தை சந்தித்துள்ளது.
மத்திய பட்ஜெட் மற்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ள ஜி.டி.பி. வளர்ச்சி கணிப்புகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்தன. மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பெரும்பாலான நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

இதனால், நிப்டி மற்றும் சென்செக்ஸ் தலா 1% மேல் உயர்ந்தன. நிப்டி குறியீட்டில் இடம்பெற்ற 12 துறைகளின் பங்குகளும் உயர்வைக் கண்டன. எனர்ஜி துறை 2.63%, நுகர்பொருட்கள் துறை 2.04%, ரியல் எஸ்டேட் துறை 1.94% மற்றும் எண்ணெய், எரிவாயு துறை 1.87% உயர்வை அடைந்தன. மும்பை பங்குச்சந்தையில் 2,741 பங்குகள் உயர்ந்தன, 1,182 பங்குகள் குறைந்தன, 124 பங்குகளில் மாற்றம் இல்லை. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி, இன்று பங்குச்சந்தைகள் வழக்கம் போல் செயல்படும்.
அன்னிய முதலீட்டாளர்கள் 1,189 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றனர். உலகளவில் கச்சா எண்ணெய் விலை 0.26% குறைந்து 76.64 அமெரிக்க டாலராக இருந்தது. ரூபாய் மதிப்பு 86.62 ஆக மாற்றமின்றி இருந்தது. நிப்டி 50 பங்குகளில் டாடா கன்ஸ்யூமர், பெல், டிரென்ட், கோல் இந்தியா, எல் அண்டு டி அதிக உயர்வு பெற்றன. பார்தி ஏர்டெல், ஐ.டி.சி. ஹோட்டல்ஸ், ஜே.எஸ்.டபுள்யு. ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், பஜாஜ் பின்சர்வ் பங்குகள் குறைந்தன.