
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) புதிய திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான தொழில் நுட்ப பயிற்சிகளை இலவசமாக வழங்க உள்ளது. இந்த திட்டம் பல்வேறு துறைகளில் திறன்களை வளர்த்து வேலை வாய்ப்புகள் ஏற்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பயிற்சி திட்டம் Multiple Skill Training and Placement Program எனப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்பட உள்ளது.
இந்த பயிற்சி திட்டத்தில் GST மற்றும் வருமான வரி தொடர்பான தொழில் நுட்ப பயிற்சிகள், உற்பத்தித் துறை பயிற்சி, BPO, இணைய தொழில்நுட்பம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற பல துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த பயிற்சிகள் நடத்தப்படும். பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் தங்களின் கல்வித்தகுதியுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். வயது 21 முதல் 30 வரை இருக்க வேண்டும். 2021 முதல் 2024 வரை பட்டம் பெற்ற இளைஞர்கள் இதற்கு தகுதி பெறுவர். மேலும், விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்பதும் முக்கியமான தகுதியாகும்.
இப்பயிற்சிக்கான கால அளவு 55 நாட்கள் ஆகும். பயிற்சி நடைபெறும் இடத்தில் தங்கும் வசதி மற்றும் உணவிற்கான செலவுகள் தாட்கோவால் வழங்கப்படும். இத்திட்டம் தொழில்முனைவோர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு. விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.