தஞ்சாவூர்: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தஞ்சையில் பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்து விற்பனையானது.
தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம், பூக்கார தெரு ஆகிய இடங்களில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இதேபோல் இங்கிருந்தும் வியாபாரிகள் மொத்தமாக பூக்கள் வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்வர். ஏராளமான பொதுமக்களும் தங்கள் தேவைக்கேற்ப பூக்கள் வாங்கி செல்வர். முகூர்த்த நாட்கள், பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகம் இருப்பதால் அந்த சமயங்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும்.
மேலும் வரத்து குறைவாக இருந்தாலும் விலை உயரும். தற்போது ஆவணி மாதம் என்பதால் நேற்று மற்றும் இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பூக்கள் விலை
கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ரூ. 750 முதல் ரூ. 1000 வரை விற்கப்பட்டது. கனகாம்பரம் கிலோ ரூ. 1000-க்கும், முல்லை கிலோ ரூ. 750 முதல் ரூ. 1000, சம்பங்கி ரூ. 300, அரளி ரூ. 200, ஆப்பிள் ரோஸ் ரூ. 250-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, ஆவணி மாதத்தில் திருமணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். இன்று, நாளை என தொடர்ந்து 2 நாட்கள் சுபமுகூர்த்தம், இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இதனால் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது என்றனர்.