சென்னை: ஜனவரி தொடக்கத்தில், ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர், போர் பதற்றம் மற்றும் பிற காரணங்களால், ஜூலை 23 அன்று ரூ.75,040 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதன் பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது, ஆனால் 2-ம் தேதி முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று, பவுனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.74,960 ஆகவும், கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.9,370 ஆகவும் விற்பனையானது.
24 காரட் தூய தங்கம் ரூ.81,768-க்கு விற்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் மட்டும், பவுனுக்கு ரூ.1,760 அதிகரித்துள்ளது. தற்போது, பவுன் ரூ.75 ஆயிரத்தை நெருங்கி வருவதால் நகை வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.125 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி கட்டிகள் ரூ.2,000 அதிகரித்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரமாகவும் இருந்தது.

சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறுகையில், “இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 25 சதவீத வரி காரணமாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.87.80 ஆகக் குறைந்துள்ளது.
இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. ஆவணி மாதத்தில் சிறப்பு நாட்களில் திருமணம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுவதால், உள்நாட்டு சந்தையிலும் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் கிராமுக்கு ரூ.10 ஆயிரத்தை எட்டக்கூடும்” என்றார்.