லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) ஒரு நாளில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் பாலிசிகளை விற்பனை செய்து கின்னஸ் உலக சாதனை பட்டத்தை வென்றுள்ளது. இந்த சாதனை ஜனவரி 20, 2025 அன்று நிகழ்ந்தது. வெறும் 24 மணி நேரத்தில் 4,52,839 ஏஜெண்டுகள் இணைந்து மொத்தம் 5,88,107 லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்பனை செய்தனர்.

இந்த சாதனை, உலக அளவில் வாழ்வாதார காப்பீட்டு துறையில் ஒரு புதிய பெஞ்ச்மார்க்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கின்னஸ் உலக சாதனை அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. LIC நிறுவனம் இந்தத் தகவலை ஒரு செய்திக் குறிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சாதனையால், நிறுவனத்தின் ஏஜெண்டுகள் காட்டிய அர்ப்பணிப்பு, உழைப்பு மற்றும் திறமையைக் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், பாலிசிதாரர்களின் நலனைக் குறிவைக்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கு இது ஒரு வலுவான அடையாளமாக இருப்பதாகவும் LIC தெரிவித்துள்ளது.
இந்த சாதனையின் பின்னணி ஒரு வித்தியாசமான திட்டம். “மேடு மில்லியன் டே” என்ற சிறப்பு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு LIC ஏஜெண்டும் குறைந்தபட்சம் ஒரு பாலிசியை விற்பனை செய்ய வேண்டும் என நோக்கமிடப்பட்டது. இதே விழாவை ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றியதற்காக, LIC நிறுவனத்தின் MD மற்றும் CEO சித்தார்த்தா மொஹாந்தி அவர்களது வழிகாட்டுதலும் முக்கிய காரணமாக இருந்தது.
இதனைத்தொடர்ந்து அனைத்து ஊழியர்களுக்கும், ஏஜெண்டுகளுக்கும், மற்றும் கஸ்டமர்களுக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்தார். இந்த சாதனை மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வு நமது நாட்டின் நிதி துறையின் திறனை உலகுக்கு காட்டும் வகையில் அமைந்துள்ளது. ஒரே நாளில் இந்த அளவுக்கு பாலிசிகளை விற்பனை செய்ததன் மூலம், நம்பிக்கையையும், சேவையையும் முதன்மையாகக் கொண்ட LIC தனது முன்னணியைக் உறுதிப்படுத்தியுள்ளது.